×

மாகே, பள்ளூரில் வீட்டில் அடைத்து மனநிலை பாதித்த வாலிபரை தாக்கி பாலியல் சித்ரவதை சமையல் மாஸ்டர் அதிரடி கைது; 4 பேருக்கு வலை

 

புதுச்சேரி, நவ. 11: மாகே, பள்ளூரில் மனநிலை பாதித்த வாலிபரை வீட்டில் அடைத்து வைத்து தாக்கியதோடு பாலியல் ரீதியான சித்ரவதை செய்ததாக 5 பேர் கும்பல் மீது காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியான சமையல் மாஸ்டரை கைது செய்த போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியம் பந்தக்கல், மூலக்கடவு பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்துள்ளார்.

அதில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயதுடைய தனது மகனை 2020 டிசம்பர் 1 முதல் பல நேரங்களில் தவறான முறையில் அவ்வப்போது வீட்டில் அடைத்து வைத்து பந்தக்கல் பகுதியைச் சேர்ந்த பெலயாத் மமூக்கா, வலயால் அப்துல்லா, மகரூப், ஆட்டோ டிரைவர் அசோகன், ராமன் என்ற ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கியதோடு இயற்கைக்கு மாறான பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என தனது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது புகார் மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், எஸ்பி ராஜசேகர வல்லட் அறிவுறுத்தலின்பேரில் மேற்கண்ட 5 பேர் கும்பல் மீதும் ஜாமீனில் வெளிவர முடியத 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குற்றச்சாட்டப்பட்ட நபர்களில் முக்கிய நபரான சமையல் மாஸ்டர் பெலயாத் மமூக்காவை கைது செய்த தனிப்படை தீவிரமாக விசாரித்து வருகிறது. மேலும் தலைமறைவான ஆட்டோ டிரைவர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை செய்து மாகே வந்துள்ள மற்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாகேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மாகே, பள்ளூரில் வீட்டில் அடைத்து மனநிலை பாதித்த வாலிபரை தாக்கி பாலியல் சித்ரவதை சமையல் மாஸ்டர் அதிரடி கைது; 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Magay ,Pallur ,Puducherry ,Mage ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை